

இந்தியாவின் பாரம்பரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் 80 ஆண்டுகளில், 6 மொழிகளில் 179 படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனத்தில் 6 முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் ஒரு படப்பிடிப்பு தளம், ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், ஏவிஎம் சரவணனின் மகன் குகன், அருணா குகன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், நடிகர் மோகன் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் குகன் கூறும்போது, “கடந்த சில வருடங்களாக இந்த ஸ்டூடியோவுக்குள் படப்பிடிப்புகள் நடைபெறுவது குறைந்து கொண்டே வந்தது. இப்போது பெரிய பெரிய படப்பிடிப்பு தளங்கள், புறநகர் பகுதிகளில் தொடங்கப்பட்டு இருக்கின்றன. எங்கள் தாத்தா தொடங்கிய ஸ்டூடியோவை தொடர்ந்து நடத்த எங்களுக்கு ஆசை.
ஆனால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் ஒரே ஒரு படப்பிடிப்புத் தளத்தை மட்டும் கன்வென்ஷன் சென்டராக மாற்றியிருக்கிறோம். இதில் சிறைச்சாலை செட் அமைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி வைத்துள்ளோம்” என்றார்.
இந்த பல்நோக்கு அரங்கம், கார்ப்பரேட் கூட்டங்கள், மாநாடுகள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள், திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.