

3-வது தேசிய விருது வென்றுள்ள ஜி.வி.பிரகாஷுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
‘அமரன்’ படத்தின் பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது அவர் வென்றுள்ள 3-வது தேசிய விருதாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில், “ஜி.வி.பிரகாஷ், உங்கள் மூன்றாவது தேசிய விருதுக்கு வாழ்த்துகள். நாம் இணைந்து கொண்டாடும் பத்தாவது தேசிய விருது இது என்பதால், இது நம் குடும்பத்திற்கு ஒரு பெருமைக்குரிய தருணமாகும்.
இசை மீதான உங்கள் ஆர்வம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிப்பதாக உள்ளது. இன்னும் பல மைல்கற்களை நீங்கள் எட்ட வாழ்த்துகிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ‘வாத்தி’ படத்தின் பாடலுக்காகவும், ‘சூரரைப் போற்று’ படத்தின் பின்னணி இசைக்காகவும் தேசிய விருது வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதுவரை தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் 7 முறையும், இளையராஜா 5 முறையும், ஜி.வி.பிரகாஷ் 3 முறையும் தேசிய விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.