

திருத்தணி: திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா இன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா, கடந்த 4-ம் தேதி ஆடி அஸ்வினி திருவிழாவோடு தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் இறுதி நாளான இன்று காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளுடன் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
இந்நிலையில், திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா இன்று தன் குடும்பத்தினருடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
நடிகை ரோஜா கடந்த 14 ஆண்டுகளாக ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் திருத்தணி கோயிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.