பழநி நில மோசடி வழக்கில் கைதான அன்வர்தீன் மரணம் - நயினார் நாகேந்திரன் சந்தேகம்

இடது:  அன்வர்தீன் | வலது: நயினார் நாகேந்திரன்

இடது:  அன்வர்தீன் | வலது: நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: ‘பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் உயிரிழந்ததை, இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.

முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப் பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?

விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.

எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இடது:&nbsp; அன்வர்தீன் | வலது:&nbsp;நயினார் நாகேந்திரன்</p></div>
தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை: திமுக, அதிமுக புறக்கணிப்பு ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in