

ரா.கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடித்த திரைப்படம் ‘மேட் இன் கொரியா’. கொரியாவுக்குச் செல்லும் இளம் பெண் ஒருவர் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை, ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்தது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்-கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருந்தளித்துக் கவுரவித்தார்.
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இவ்விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் ‘மேட் இன் கொரியா’ கதாநாயகி பிரியங்கா மோகனும் கலந்துகொண்டார்.
இது பற்றி பிரியங்கா மோகன் கூறும்போது, “இப்படி ஒரு விருந்தில் பங்கேற்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இவ்வளவு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற விருந்தில் நான் கலந்துகொண்டது அற்புதமான அனுபவமாக இருந்தது.
இதில் பலரும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தைப் பற்றிப் பேசியதும், தென் கொரிய அதிபரே படத்தைப் பாராட்டியதும் எனக்குப் பெருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.