

நடிகர் நாசர் மற்றும் சினிமா ஃபேக்டரி அகாடமியினர் இணைந்து, 2 மேடை நாடகங்களை ஒரே நிகழ்ச்சியாக வழங்குகின்றனர்.
உலக இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்றான ஹோமரின் ‘ஒடிஸ்ஸி’ மற்றும் ‘12 ஆங்கிரி மென்’ திரைப்படக் கதையைத் தழுவிய ‘மணிகண்டன் கொலை வழக்கு’ ஆகிய நாடகங்கள் வழங்கப்படுகின்றன. நடிப்பு மாணவர்கள் அரங்கேற்றும் இந்த நாடகங்களை தேசிய நாடகப் பள்ளி முன்னாள் மாணவரும், நாடக இயக்குநருமான எஸ். சந்திர மோகன் இயக்கியுள்ளார். சினிமா ஃபேக்டரி அகாடமியின் நிறுவனர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.
“மனித உறவுகள், நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கும் ‘ஒடிஸ்ஸி’ பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். உலகப் புகழ்பெற்ற ‘12 ஆங்கிரி மென்’ கதையைத் தழுவி, பள்ளியை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணியில் ‘மணிகண்டன் கொலை வழக்கு’ உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் நடைபெறும் மர்மமான கொலைச் சம்பவத்தைச் சுற்றி விரியும் இந்த நாடகம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் உண்மையின் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது” என்று நாடகக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு நாடகங்களும் சினிமா ஃபேக்டரி அகாடமியின் நடிப்பு மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் சிறப்பு மேடை நிகழ்ச்சியாக அமைகின்றன. இந்த நிகழ்ச்சி இன்று ( ஜூலை 9) மாலை 6 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை – தி ஸ்டேஜ்’ அரங்கில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.