

வாழ்க்கை, எல்லோருக்கும் ஏராளமாக கற்றுக்கொடுக்கிறது. அந்தக்கற்றலில் இருந்தே மனிதன் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான், அல்லது தன்னை மாற்றிக்கொள்கிறான். அப்படி மாற்றிக்கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதுமே வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கிறது.
நான் எனது வாழ்பனுவங்களில் இருந்து கற்ற விஷயங்களை இங்கே 40 வாரங்களாகத் தொடராக எழுதி வந்திருக்கிறேன். நான் கற்றது, பெற்றது உள்ளிட்ட அனுபவங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறேன்.
நாகப்பட்டினத்தில் நான் பிறந்தது, 1962 சீனப்போரின் போது, எங்கள் ஊரிலும் குண்டு போடுவார்கள் என பயந்தது, எங்கள் ஊருக்குள் முதல் முதலாக ஹெலிகாப்டர் வந்தது, எங்கள் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது, பச்சையப்பன் கல்லூரியில் நான் படித்தது, என் மூத்த சகோதரி ஹேமமாலினி சினிமாவில் நடிக்கத்தொடங்கி, பின்னர் டப்பிங் கலைஞராக மாறியது, அவருடன் டப்பிங் தியேட்டருக்கு துணைக்குச் சென்றது, அப்படியே நானும் டப்பிங் பேச கற்றுக்கொண்டது, இளைய சகோதரி தாராசந்துரு, காலம் சென்ற என் சகோதரன், பெற்றோர், திரையுலகில் எனக்கு ஆதரவளித்தவர்கள், நண்பர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், பழகியவர்கள், இப்போதும் பழகுபவர்கள், என்னை தவிக்க விட்டு பிரிந்தவர்கள் என பல விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.
என்னுடைய குருவான, வசனகர்த்தா ஐயா ஆரூர்தாஸ் டப்பிங் யூனிட்டில் பணி புரிந்து, நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது, பிறகு சகோதரர் மருதபரணி யூனிட்டில் வேலை பார்த்தது, டப்பிங்கில் நான் சந்தித்த சவாலான அனுபவங்கள், ஆங்கில படங்களுக்கும் டெலிபிலிம்களுக்கும் டப்பிங் பேசிய போது நடந்த நகைச்சுவையான விஷயங்கள், சின்னத்திரை தொடர்களில் நான் நடிக்கச் சென்றது, தொடர்களில் நடித்த போது எனக்கு நேர்ந்த நல்லது, கெட்டது அனைத்தையும் உங்களுடன் பேசியிருக்கிறேன்.
மாயாவி மாரீசன், மாஸ்டர் மாயாவி தொடர்கள், எனக்குப்புகழை பெற்றுத்தந்த பட்டாபி கதாபாத்திரம் உருவான கதை, அந்த கதாபாத்திரத்துக்கு காரண கர்த்தாக்களாக இருந்த மூன்று பேர் பற்றியும் அவர்களின் மேனரிசங்களை பின்பற்றியே அக்கதாபாத்திரத்தில் நடித்ததை பற்றியும் கூறியிருக்கிறேன்.
அதன் அடுத்த கட்டமாக நான் சினிமாவுக்கு வந்தது, பட வாய்ப்புக் கேட்டு பலரிடம் நான் அவமானப்பட்டது, அந்த அவமானங்களே எனக்கு உரமாகி என்னை மாற்றியது, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை, பெரிய திரை இயக்குநர்கள் என பலருடன் பணியாற்றியது, எனக்குத் தேசிய விருது கிடைத்தது என பல அனுபவங்களையும் கூறியிருக்கிறேன்.
இதற்கிடையே என்னுடைய மனைவி, மகள், மகன், மாப்பிள்ளை, பேத்தி சம்பந்தி வீட்டார் பற்றியும் சொல்லியிருக்கிறேன்.
இப்படியான என் அனுபவங்களை வாசித்தும் ரசித்தும் எனக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட வாசகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்பது வெறும் வார்த்தைதான். நீங்கள் தரும் உற்சாகமும் கைதட்டல்களும்தான் சினிமாவில் நான் தொடர்ந்து பயணிக்க காரணம். அந்த கைத்தட்டல்களே நான் பெறும் பெரும் விருதுகள்.
அதற்காகவே ஓடிக்கொண்டிருக்கிறேன். உடலில் வலு உள்ளவரை ஓடிக்கொண்டே இருப்பேன். சிறந்த கதாபாத்திரங்கள் மூலம் மக்களை மகிழ்வித்துக்கொண்டே இருப்பேன்.
என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையும், சம்பந்தி குடும்பத்தாரும் அமைந்தது போல், என் மகனுக்கும் நல்ல மனைவி, மக்கள் அமைய வேண்டும். என் மகன் திரையுலகில் உயர்ந்த நிலையான இடத்தைப் பெற வேண்டும். அனைவருக்கும் நான் நல்லவனாக, ஆரோக்கியத்தோடு இறுதி மூச்சு வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே இறைவனிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.