தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை
Updated on
1 min read

சென்னை: ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறாததால், அப்படத்தை தயாரித்த வொண்டர் பார் நிறுவனம், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன்பேரில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த புகார் மீதான விசாரணையை ரத்து செய்யக்கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக நடந்தது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவர் மீதும் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in