

மீண்டும் வெளியாகவுள்ள 'பாட்ஷா' படத்துக்காக, புதிதாக பின்னணி இசையை அமைத்து சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.
ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது.
தற்போது 'பாட்ஷா' படத்தை மெருக்கூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். 'பாட்ஷா' படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இப்படத்தில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் பேசிய டப்பிங்கை படக்குழு எதுவுமே செய்யவில்லை. தற்போது பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. இந்த முயற்சியால் படம் மேலும் மெருக்கூட்டியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படத்தின் பணிகள் முடிந்து, ஜனவரியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மெருகூட்டப்பட்ட 'பாட்ஷா' படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.