

மகிழ் திருமேனியின் 'கலகத் தலைவன்' படத்தில், மிரட்டலான வில்லனாக வந்து கவனம் ஈர்த்திருக்கிறார், ஆரவ். படத்தின் நாயகன் உதயநிதிக்கு சமமான வேடம் அவருக்கு. பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவர், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர்.
திடீரென வில்லனாக நடிக்க சம்மதித்தது எப்படி?
நடிகன் ஆகணும்னு சினிமாவுக்கு வந்தேன். அது வில்லனா இருந்தாலும் சரி, கேரக்டர் ரோலா இருந்தாலும் சரின்னுதான் முதல்ல நினைச்சேன். அதாவது, வாய்ப்பு கிடைச்சா போதும்னு நினைச்சிருந்தேன். பிறகு கிடைச்சதெல்லாம் போனஸ்தான். அப்படித்தான் ஹீரோவா வாய்ப்புக் கிடைச்சுது. நிறைய வில்லன் கேரக்டர்களும் வந்துட்டுதான் இருந்தது. சரியான இயக்குநர் படத்துல, சரியான கதையில நடிக்கணும்னு காத்திட்டிருந்தேன். வழக்கமான ஒரு கதையில அப்படி பண்ணிட்டு அதோட போயிடக் கூடாதுன்னும் தோணுச்சு. கரெக்டான நேரத்துல 'கலகத் தலைவன் ' என் ஆசையை நிறைவேற்றிருக்கு.
எப்படி?
மகிழ் திருமேனி படங்கள் எனக்குப் பிடிக்கும். அவரோட நான் தொடர்புலயே இருந்தேன். திடீர்னு ஒரு நாள், ரெட் ஜெயன்ட்ல இருந்து ஃபோன். ‘இப்படி ஒரு படம். நெகட்டிவ் ரோல். நீங்க ஹீரோவா பண்ணிடிருக்கீங்க, நடிப்பீங்களா?’ன்னு கேட்டாங்க. எனக்கு தயக்கம் இருந்தது. நான்பண்ணினா எப்படி வரவேற்புகிடைக்கும்னு நினைச்சேன். ஏன்னா, எனக்கு முன்னால நிறைய பேர் வில்லனா பண்ணி, தங்களை நிரூபிச்சுட்டு போயிருக்கிற இடம் இது. வில்லனா நடிக்கிறது எளிதானதும் இல்ல. அதே நேரம் ஓடிடி வந்தப் பிறகு உலக சினிமாவை ரசிகர்கள் அதிகம் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. யாரையும் ஏமாற்ற முடியாது. அதனால, அதை சரியா பண்ண முடியுமான்னு பயம் இருந்தது. மகிழ் சார் அந்தகேரக்டரை சரியா வடிவமைச்சிருந்தார். கேட்டதும் உடனேநடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அவர் என் மேல வச்சிருந்த நம்பிக்கை, அவர் எனக்கு கொடுத்த இன்புட், வேலை வாங்குனது எல்லாமே இந்த கேரக்டருக்கு பலமா இருந்தது.
இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர். உதயநிதி என்ன சொன்னார்?
வில்லனும் சமமா இருந்தாதான் கதைக்குப் பலமா இருக்கும்னு உதய் அண்ணனும் நினைச்சார். மகிழ் திருமேனியையே நடிக்க வைக்கலாம்னு அவர்நினைச்சதாகக் கூட சொல்லியிருக்கார். வில்லனுக்கும் சரியான ஸ்கோப் இருக்கணும், அவருக்கான இடத்தை கொடுக்கணும்னு உதய் அண்ணனும் விரும்பினார். அவரோட நடிச்சது நல்ல அனுபவம்.
கிடைச்சிருக்கிற வரவேற்பு எப்படியிருக்கு?
‘இந்த கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும், ரசிகர்கள் விரும்புவாங்க’ன்னு படம் பண்ணும்போதே நம்பினாங்க. இயல்பா நான் அமைதியான கேரக்டர். என் குணாதிசயத்துக்கு நேர்மாறானது அர்ஜுன் கேரக்டர். அதுக்கான பாடிலாங்குவேஜ், மிரட்டலான பார்வைன்னு எனக்குச் சவாலா இருந்தது. அதோட இன்னைக்கு சமூக வலைதளங்கள்ல ட்ரோல் பண்றது அதிகமா இருக்குது. எனக்கு அப்படி ஏதும் வந்தா, அதையும் ஏத்துக்க வேண்டியதான்னும் நினைச்சிருந்தேன். ஆனா, அப்படி ஏதும் நடக்கலை. ரசிகர்கள் என் கேரக்டரையும் ஏத்துக்கிட்டது மகிழ்ச்சியா இருக்கு.
இந்த கேரக்டருக்கு ஹோம்ஒர்க் பண்ணுனீங்களாமே?
ஆமா. இதுக்கு முன்னால எனக்கு அப்படி வாய்ப்புகள் அமையல. இதுல, அர்ஜுன் கேரக்டரை மகிழ் சார், அருமையா உருவாக்கி வச்சிருந்தார். முன்னாள் ராணுவ கமாண்டோவா இருந்தவன், எப்படி நடந்து வருவான். ஒரு ஆளைப் பார்த்தாம்னா, அவன்பார்வை எப்படி இருக்கும், எப்படிபேசுவான்னு பக்காவா வச்சிருந்தார். அதுக்கு ஏற்ற மாதிரி ஹோம் ஒர்க் பண்ணினேன்.
இனி தொடர்ந்து வில்லன் கேரக்டர்தானா?
அப்படின்னு எந்த வரையறையும் வச்சுக்கலை. ஹீரோ, வில்லன் எதுவா இருந்தாலும் சரிதான். சுவாரஸ்யமான கேரக்டர் ரோல் கிடைச்சாலும் பண்ணுவேன்.
நீங்க நடிச்ச ‘ராஜபீமா’ என்னாச்சு?
படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு. ரிலீஸ் பண்ண பேசிட்டிருக்காங்க. நரேஷ் சம்பத் இயக்கி இருக்கிற இந்தப் படத்துலயும் என் கேரக்டர் ரசிக்கும்படியா இருக்கும். அடுத்து சில தயாரிப்பாளர்கள் பேசிட்டு இருக்காங்க. இன்னும் கமிட் ஆகலை.