

புதுமுக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'டோரா', 'மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் படம்', 'அறம்', 'இமைக்கா நொடிகள்' மற்றும் 'கொலையுதிர் காலம்' உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நயன்தாரா. இதில் 'அறம்', 'டோரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்கள் நயன்தாரா தான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் பரத் ரங்காச்சாரி இயக்க இருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, மங்கோலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள பத்திரிகையாளராக நடிக்கவுள்ள நயன்தாரா, தனது அடையாளம் மற்றும் குடும்பத்தினரைத் தேடி பல இடங்களுக்கு பயணித்து இறுதியாக இந்தியா வருகிறார். முழுக்க த்ரில்லர் பாணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகவுள்ளது.
வெளிநாடுகளில் முழுக்க மலை மற்றும் பனிப் பிரதேசங்கள், பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மங்கோலியாவில் படமாக்கப்பட இருக்கும் முதல் தமிழ்ப் படமாக இப்படம் அமையவுள்ளது.
ஒளிப்பதிவாளராக செழியன் பணியாற்றவிருக்கும் இப்படத்துக்கு கலை இயக்குநராக சதீஷ் குமார் பணிபுரிய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். 'நேர்வழி' என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் இன்னும் தலைப்பை இறுதி செய்யவில்லை.