

நடிகர் விஷால், திருவள்ளூர் மாவட்டம் மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசையோடு இலவச திருமணத்தை நேற்று நடத்தி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தத் திருமணத்தை நடத்தி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில், இந்த ஜோடிகளின் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்வேன். மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் இலவச திருமணங்கள் நடக்க ஏற்பாடு செய்வேன். நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. முடிந்ததும் நான் திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும்.
நான் காசிக்கு சென்றது பற்றி கேட்கிறார்கள். அங்கு நான் பார்த்த விஷயங்களைப் பாராட்டி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் அளித்தது சந்தோஷமாக இருந்தது. இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.