

'பைரவா' உடைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கிண்டல் செய்து வருவதால் ஆடை வடிவமைப்பாளர் சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பைரவா'. இப்படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் சத்யா. 'பைரவா' படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்த அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.
சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், விஜய்யின் ஆடை வடிவமைப்பை சிலர் கேலி செய்து வருகிறார்கள். இதற்கு ஆடை வடிவமைப்பாளர் சத்யா தனது ட்விட்டர் தளத்தில் பதிலளித்திருக்கிறார்.
"சாம்பல் கலந்த சிவப்பு சட்டை ரெடிமேட் ஆக வாங்கி, அதன் முன்பகுதியை வெட்டி சாம்பல் நிறத்துணியைத் தைத்தோம். அந்த சட்டையில் பாக்கெட்டின் கீழ் நிறைய பட்டன்கள் இருக்கும். அது ஒரு புதிய முயற்சி. சாம்பல் கலந்த சிவப்பு நிறப் பேண்ட்டை தனியாக செய்தோம். சுருக்கமாக சொல்வதென்றால் மடங்கும் போது நீல நிறம் தெரியும் வகையில் உருவாக்கினோம். 'பைரவா'வுக்காக இந்த கடின உழைப்பை மேற்கொண்டோம். நேர்மறையோ, எதிர்மறையோ உங்கள் கருத்துகளை வெளியிடலாம். ஆனால், மொத்த காட்சிகளோடு உடையைப் பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தால் மகிழ்வேன்" என்று தெரிவித்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் சத்யா.
ஜனவரி 12-ம் தேதி வெளியீட்டுக்கு இப்படம் தயாராகி வருகிறது. விரைவில் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிடுவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.