Published : 04 Oct 2022 07:34 PM
Last Updated : 04 Oct 2022 07:34 PM

மணிரத்னத்தின் முத்திரை சினிமா இது - பொன்னியின் செல்வனை பாராட்டிய சீனு ராமசாமி

''இயக்குநர் மணிரத்னம் அவர்களின் முத்திரை சினிமா இது, வாழ்த்துகிறேன்'' என்று பொன்னியின் செல்வன் படம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.86 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ரூ.21.34 கோடியையும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது. நான்காவது நாளான நேற்று ரூ.13.08 கோடியுடன் மொத்தம் இதுவரை நான்கு நாட்களில் ரூ.82.79 கோடியை படம் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உருவகம், உள்ளடக்கம், நவீன சினிமா மொழியின் நேர்த்தி, உள்ளார்ந்த உற்சாகம் தரும் இசை, ஒளிப்பதிவு சிறப்பு. நடித்தவர்களின் உழைப்பு வியப்பு. வெகுஜன திரை எழுத்தில் உருவாகும் விதத்தில் கவனம் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் முத்திரை சினிமா இது, வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x