Published : 01 Oct 2022 06:44 AM
Last Updated : 01 Oct 2022 06:44 AM

பொன்னியின் செல்வன் - பாகம் 1: திரை விமர்சனம்

தஞ்சையை ஆளும் சுந்தரச் சோழர் (பிரகாஷ்ராஜ்) உடல் நலமின்றி இருக்கிறார். அடுத்து முடி சூட அவர் மகன்கள், ஆதித்த கரிகாலனும் (விக்ரம்), அருண்மொழிவர்மனும் (ஜெயம் ரவி) இருக்கிறார்கள். கூடவே மகள் குந்தவையும்( த்ரிஷா). பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) தலைமையில் சிற்றரசர் குழு, சுந்தரச் சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை (ரகுமான்) அரியணையில் அமர்த்தத் திட்டம் தீட்டுகிறது. தன் தந்தைக்கு எதிராக சதி நடப்பதை அறியும் ஆதித்த கரிகாலன், அந்தச் சதி என்ன என்பதை அறியவும் குந்தவையை சந்திக்கவும் வந்தியத்தேவனை (கார்த்தி) தூதனுப்புகிறார். இலங்கையில் இருக்கும் அருள்மொழிவர்மனை அழைத்து வரவும் முயற்சி நடக்கிறது. இது ஒரு புறமிருக்க, சோழ வம்சத்தை அழித்தொழிக்கும் பாண்டியன் ஆபத்துதவிகளின் தொடர்பில் இருக்கிறார், பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி (ஐஸ்வர்யா ராய்). இந்தச் சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம்.

லட்சக்கணக்கான வாசகர்கள் ஏற்கனவே படித்து ரசித்த ஒரு கதையைப் படமாக்கும்போது, வாசகர்களுக்கு மற்றும் சினிமா ரசிகர்களுக்கு எந்த விதமானத் திருப்பமும் ஆச்சரியமளிக்காது என்பது, இதுபோன்ற முயற்சிகளில் உள்ள பலவீனம். அதை மணிரத்னம் வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறாரா?

படித்த கதைதான் என்றாலும் அதைப் படமாக்கிய விதத்தில், விஷூவல் ஆச்சரியத்தைக் கொட்டிய வகையில், ஒரு மெகா பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்தி இருக்கிறார், மணிரத்னம். அந்தப் பிரம்மாண்டத்துக்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் ஒளிப்பதிவும் இசையும் விஎப்எக்ஸ் காட்சிகளும் ஜெயமோகன், இளங்கோ குமரவேலின் திரைக்கதையும் ஆழமாகக் கைகொடுத்திருக்கின்றன.

கல்கியின் மூலக் கதையிலிருந்து விலகாமல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 5 பாக நாவலை 2 திரைப்படங்களாக சுருக்க வேண்டியிருப்பதால் கதையின் தொடர்ச்சியைத் தக்க வைக்க, கல்கி சொல்லாத சில விஷயங்களையும் சேர்த்திருக்கிறார்கள். குந்தவை, ஆதித்த கரிகாலனைச் சந்திப்பது அத்தகைய இணைப்புதான். ஆனாலும் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட சில கேரக்டர்களின் பின்னணி, முதல் பார்ட்டில் முழுமை அடையாமல் இருப்பது நாவலை படிக்காதவர்களுக்கு ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.

போராசை கொண்ட ஆதித்த கரிகாலன் படைகளுடன் மோதுவதில் இருந்து தொடங்குகிறது படம். அந்தப் பாத்திரத்துக்கு விக்ரம் அமர்க்களமானத் தேர்வு. தனது முன்னாள் காதலி நந்தினியை நினைத்து உருகுவதும் இந்தப் போரும் ரத்தமும் அவளுக்காகத்தான் என காட்டும் ஆவேசத்திலும், தான் தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

அவரோடு வாளேந்தி வீரம் காட்டும் கார்த்தியின் அறிமுகமும் ஆரவாரம். சோழ அரசின் விசுவாசி, பெண்களை விரும்புகிறவன், சிறந்த வீரன் என்ற வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்குத் தன்னைவிட சிறப்பானத் தேர்வு இருந்துவிட முடியாது என்பதை காட்டியிருக்கிறார் அவர். நாவலில் இருக்கும் அவர் கேரக்டரின் சாகசமும் சின்ன சின்னதாக வெளிப்படும் நகைச்சுவையும் குந்தவை உள்ளிட்டோரிடம் காட்டும் காதல் பார்வையையும் படத்திலும் அப்படியே ரசிக்க முடிகிறது.

அருள்மொழிவர்மனான ஜெயம் ரவி இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் என்றாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நந்தினி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் கச்சிதம். அவர் பார்வையும் பேச்சும் பெரிய பழுவேட்டரையரை மட்டுமல்ல, அனைவரையும் கொள்ளை கொள்ளும். குந்தவை த்ரிஷாவும் அலட்டல் இல்லாத நடிப்பில் ஈர்க்கிறார்.

பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்துக்கு சரத்குமாரின் தோற்றம் சுகமாகப் பொருந்துகிறது. நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாகவே மாறியிருக்கிறார். சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரியவேளார் பிரபு, சமுத்திரக்குமாரி ஐஸ்வர்யா லட்சுமி, வானதிஷோபிதா துலிபாலா, மதுராந்தகன் ரகுமான், ரவிதாசன் கிஷோர், பாண்டியன் ஆபத்துதவியான ரியாஸ்கான், சேந்தன் அமுதன் அஸ்வின் உட்பட அனை வருமேதங்கள் பங்களிப்பைச் சிறப்பாக்கி இருக்கிறார்கள். பல நடிகர்கள், சில காட்சிகளில் கவனம்ஈர்த்தாலும் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கான முக்கியத்துவத்தை உணர முடியவில்லை.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட கோட்டையின் ஆச்சரியத்தையும், போர்க்காட்சிகளில் மிரட்டலையும் ஆர்ப்பாட்டமாகக் காட்டியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும் பலம். தோட்டா தரணியின் கலை இயக்கம்மணிரத்னத்தின் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. படத்தின் முடிவும் இறுதித் தருணத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தின் முகமும் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பைப் அதிகரித்துள்ளன.‘பொன்னியின் செல்வன்’ கதாசிரியர் கல்கியின் காவிய வடிவத்தை, இந்தத் திரைப்படம் ஆங்காங்கே சிதைத்திருப்பதாகக் கூட விமர்சனங்கள் வரலாம். ஆனால், கல்கியின் கதை, வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட, ஒரு புனைவுதான் என்பதையும் மறந்துவிட முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x