

சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படத்தை இளையராஜா கலியபெருமாள் இயக்கி வருகிறார். இவர், கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் டி.எல் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
லதா பாபு மற்றும் துர்க்கைனி ஆஃப் டுவின் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது.
படம்பற்றி இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் ‘இந்து தமிழ் திசை’ யிடம் கூறும்போது, ‘‘இது ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதை. கள்ளக்குறிச்சிக்கும் ஆத்தூருக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலையில் கதை நடக்கிறது. சிபி சத்யராஜ் 3 தோற்றங்களில் வருகிறார். அவருக்கு ஜோடி இல்லை. ஆனால், 25 முக்கிய கேரக்டர்களை சுற்றி கதை நகரும். வித்தியாசமான திரில்லர் கதையாக இருக்கும். ஒரே கட்டமாக படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
இதில் ’வத்திக்குச்சி’ திலீப், கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா , தங்கதுரை உட்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் வெங்கட் ராமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.