Last Updated : 15 Aug, 2022 08:58 PM

 

Published : 15 Aug 2022 08:58 PM
Last Updated : 15 Aug 2022 08:58 PM

இந்தியா @ 75: தமிழ் சினிமாவும் பெண் கதாபாத்திர புரட்சியும்

நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டை கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட கதாபாத்திர சித்தரிப்பில் தமிழ் சினிமா கண்டுள்ள மாற்றத்தை அறிந்துகொள்வோம். அந்த வகையில், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்று எந்த அளவுக்கு மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை மீளாய்வு செய்வோம்.

ரஜினி நடிப்பில் வெளியான 'படையப்பா' படத்தில், 'பொம்பளைன்னா பொறுமை வேணும். அடக்கம் வேணும். கட்டுப்பாடு வேணும் கத்தக்கூடாது. அதிகாரம் பண்ணக்கூடாது. பயபக்தியா இருக்கணும்' என க்ளாஸ் எடுப்பார். அப்படியே கட் செய்தால், 'காலா' படத்தில் தன்னுடைய ஆடையை அவிழ்க்கும் ஒருவனுக்கு எதிராக ஆயுதத்தை எடுக்கிறாள் புயல். இது தமிழ் சினிமா கண்டடைந்த முக்கியமான மாற்றம். ஆனாலும், தமிழ் சினிமா 70களில் 'அவள் அப்படித்தான்' என்ற பெண் மைய கதாபாத்திரத்தை அன்றே அழுத்தமாக சித்தரித்ததையும் நாம் மறந்து விட முடியாது.

ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பெண்கள் ஒரு ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்களிலயே காட்சிப்படுத்தபட்டனர். பணக்கார பெண் ஒருவர் உழைத்து நேர்மையாக இருக்கும் ஆண் ஒருவரை காதலிப்பார். தொடக்கத்தில் திமிராக காட்சிப்படுத்தப்படும் அவர், நாயகன் பாடமெடுத்த பின்னர் திருந்தி வாழ்வார். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் இப்படியான கதாபாத்திரங்களை நிறையவே பார்க்கலாம்.

படித்த பெண் என்றாலே அவர் 'திமிர்' பிடித்தவர் என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் காலங்காலமாக கட்டமைக்கபட்ட ஒன்றாக நிலவி வந்தது. பின்னால் வந்த இயக்குநர்கள் அந்த பிம்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க முற்பட்டனர். அப்படியான நம் தேடலில் முன்னால் வந்து நிற்கிறார் இயக்குநர் ருத்ரைய்யா. 1978-ல் எப்படி அவரால் 'அவள் அப்படித்தான்' படத்தை எடுக்க முடிந்தது என்பதை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆனால், அவருக்கு முன்பாகவே அங்கே கே.பாலசந்தர் அங்கே ஒரு முக்கியமான தடத்தை 'நூற்றுக்கு நூறு' படம் மூலமாக பதிய வைத்திருக்கிறார். ஜெய்சங்கர் நடித்த இந்தப்படம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றி பேசியது. தொடர்ந்து, அவள் ஒரு தொடர்கதை (1974), அரங்கேற்றம் (1973), மனதில் உறுதி வேண்டும் (1987) ஆகிய படங்கள் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டன. அதேபோல, அவர்கள் (1977), ஒரு வீடு இரு வாசல் (1992), 47 நாட்கள் (1971), மற்றும் நூல்வேலி (1979) ஆகிய படங்கள் பெண்களின் திருமண வாழ்க்கை குறித்த பேசின. அப்படிப் பார்க்கும்போது பாலசந்தர் படங்கள் பெண் கதாபாத்திரங்களை திரையில் அழுத்தமாக பதிய வைத்தன.

மகேந்திரனின் 'மெட்டி'யை இங்க குறிப்பிடலாம். பாலுமகேந்திராவை எடுத்துக்கொண்டால் அவரின் மறுபடியும் (1993) கோகிலா (1977), ரெட்டை வால் குருவி (1987), ஓலங்கள் (1982) திருமணத்தை மீறிய உறவை வலுவான கதாபாத்திரங்களின் வழி பேசின.

ஆனால், 90களில் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களின் வரவு மந்தமடைந்தன. பெண் வெறுப்பு, காதல் தோல்விக்கு பெண்களை குற்றம்சுமத்துவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் குற்றவாளியாக்கப்படுவது என பெரும்பாலான படங்கள் வெளிவரத்தொடங்கின. 1999-ம் ஆண்டு வெளியான 'படையப்பா' கிராமத்து பெண்ணை சாந்தமான நல்லவராகவும், நகரத்தில்/வெளிநாட்டில் படித்த பெண்ணை எதிர்மறையாக்கும் அபாயத்தை காட்சிப்படுத்தியது.

2000-க்குப் ஸிக்-ஸாக் பாணியில் பெரும்பாலான பெண் வெறுப்பு படங்களின் நடுவே அவ்வப்போது அழுத்தமான பெண் கதாபாத்திரங்களைக்கொண்ட படங்கள் புழுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், 'அடிடா அவள, வெட்றா அவள' எனவும், ஆண்களை திருத்தும் பொறுப்பை பெண்களே ஏற்பதையும், காதலிக்க, அழுக, டூயட் பாடல்களுக்கு பெண் கதாபாத்திரங்களை பயன்படுத்தும் வகையிலும் பெண் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன. இடையில், 'இறைவி', 'தரமணி','அருவி' போன்ற படங்கள்.

அந்த வகையில், 2010-க்குப்பிறகு '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'பொன்மகள் வந்தாள்', 'காற்றின் மொழி', என ஜோதிகா ஒரு கம்பேக் கொடுத்தார். அக்கா, செகண்ட் ஹீரோயின் போன்ற கதாபாத்திரங்களுக்கு ஒப்புக்கொடுக்காமல், பெண் மைய கதாபாத்திரங்களை முன்னெடுத்தார்.

ஒரு இயக்குநராக தற்போது பெண் கதாபாத்திரங்களை சிரத்தையுடனும் அழுத்தத்துடனும் காட்சிப்படுத்துவதில் இயக்குநர் ரஞ்சித் கவனம் பெறுகிறார். முன்பே சொன்னது போல, 'காலா' படத்தில் புயல் பேண்ட்-க்கு பதிலாக கட்டையை கையிலெடுத்தார். 'கபாலி'யில் சாய் தன்சிகாவின் தன் அப்பாவை காப்பாற்றும் காட்சிகள் மகனுக்கான தேவையை உடைத்தன.

அதுபோலவே சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி, ஹலீதா ஷமீம் போன்ற இயக்குநர்களின் வருகை தமிழ் சினிமாவில் பெண்களுக்கான இடங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' போல பல அழுத்தமான பெண்களுக்கான படைப்பு வெகுஜன சினிமாவில் காட்சிப்படுத்தப்படுவதே சுதந்திரதுக்கான உண்மையான நோக்கமாக இருக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x