

'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கமல் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகளோடு படப்பிடிப்பு தொடங்குகிறது.
ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும படம் 'சபாஷ் நாயுடு'. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
"இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கமல் மற்றும் பிரம்மானந்தம் இருவரும் பங்கேற்கும் துரத்தல் காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள். அதற்காக படக்குழு சில நாட்கள் ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். படப்பிடிப்பில் இருவருமே டூப் எதுவும் இல்லாமல் நடிக்க இருக்கிறார்கள்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்,.
இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளில் கமலுக்கு நண்பராக பிரம்மானந்தம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'சபாஷ் குண்டு' என்று படமாக இருக்கும் இந்தி பதிப்பில் செளரப் சுக்லா கமலுக்கு நண்பராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சுமார் 80% காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இளையராஜா இப்படத்தின் இசைக்காக பணியாற்ற தொடங்கி இருக்கிறார்.
லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. டிசம்பர் 1ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.