

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்திருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டவர் சிம்பு. ஆனால் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் விழாக்கள், நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்விலும் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் சிம்பு.
நடிகர் சங்கத்தில் இருந்து விலகலுக்கான காரணம் குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "நான் சிறுவயதில் இருந்தே நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். பீப் பாடல் குறித்து பெரிய சர்ச்சை உண்டானது. ஆனால், அப்பாடலை நான் வெளியிடவே இல்லை. அது குறித்து எனக்கு பிரச்சினையான போது இந்த நடிகர் சங்கம் எங்கே போனது?. நான் வெளியிடாத பாடலுக்கு பிரச்சினையான போது நடிகர் சங்கம் ஒரு உறுப்பினருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும். அதை பண்ணவில்லை.
தற்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் அனைத்து முன்னணி நடிகர்களை அழைத்து கேவலப்படுத்தி விட்டார்கள். இப்படி கேவலப்படுத்தும் நடிகர் சங்கத்தில் நாம் ஏன் உறுப்பினராக இருக்க வேண்டும் என தோன்றியது. ஆகவே நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்" என்று தெரிவித்தார் சிம்பு.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் கடிதத்தை 22-ம் தேதி அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.