சில படங்களைப் பார்த்த பின்பு தியேட்டர்களைத் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது: பாக்யராஜ் வருத்தம்

சில படங்களைப் பார்த்த பின்பு தியேட்டர்களைத் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது: பாக்யராஜ் வருத்தம்
Updated on
1 min read

சில படங்களைப் பார்த்த பின்பு தியேட்டர்களைத் திறக்காமலேயே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று இயக்குநர் பாக்யராஜ் பேசியுள்ளார்.

ஆர்.கே.வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி காதல் கதை’. இதில் ஆகாஷ் பிரேம் குமார், புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ் க்யூப் நிறுவனம் சார்பில் இ.மோகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (09.12.21) சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் சிபிராஜ், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதாவது:

''நேற்று விபத்தில் இறந்த முப்படைத் தளபதி, அவரின் மனைவி மீதமுள்ள 12 பேருக்காக வருந்துகிறேன்.

கரோனாவிற்குப் பிறகு தியேட்டர்களைத் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர்களைத் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால், தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொதுநல வழக்குப் போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்''.

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in