Published : 24 Nov 2021 01:38 PM
Last Updated : 24 Nov 2021 01:38 PM

ஷங்கருக்கு போட்டியாக ஆஸ்கர் ரவிச்சந்திரன்: மீண்டும் சர்ச்சையில் ’அந்நியன்’ ரீமேக்

ஷங்கருக்கு போட்டியாக 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், விவேக், சதா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்நியன்'. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார்.

பென் மூவிஸ் தயாரிக்கவுள்ள 'அந்நியன்' இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு தற்போது ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கும் எனக் கூறப்பட்டது. இதனிடையே, இந்தி ரீமேக் அறிவித்தவுடன் 'அந்நியன்' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் - ஷங்கர் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.

இருவருமே கதை உரிமை தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டு வந்தனர். இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

ஒரு பெரிய பாலிவுட் நடிகரையும் ஜாக்கி சானையும் வைத்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளேன். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏப்ரலில் தொடங்க உள்ளது. எனக்கு ஜாக்கி சானை பல ஆண்டுகளாக தெரியும். நான் தயாரித்த ‘தசாவதாரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு கூட அவர் வந்துள்ளார்.

இவ்வாறு ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக ஷங்கர் அறிவித்து விட்ட நிலையில் தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x