தனக்காகக் கோரிக்கை வைத்த விஷால்: ஆர்யா நன்றி

தனக்காகக் கோரிக்கை வைத்த விஷால்: ஆர்யா நன்றி
Updated on
1 min read

தனக்காக ஆனந்த் ஷங்கரிடம் கோரிக்கை வைத்த விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆர்யா.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனிமி'. வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், பின்னணி இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்தச் சந்திப்பில் ஆர்யா பேசியதாவது:

" 'எனிமி' படத்தைப் பற்றி முதலில் கூறியது விஷால்தான். ஒரு கதை கேட்டேன், உனக்கு செமயாக இருக்கும் என்றார். ஆனந்த ஷங்கர் கதையைக் கூறியவுடன் ரொம்பவே பிடித்துவிட்டது. இரண்டு கதாபாத்திரங்களில் எதில் நடிப்பது என்று ஒரு குழப்பம் நிலவியது. படத்தில் எனக்காகச் சிறப்பான மற்றும் மாஸான காட்சிகள் அதிகமாக வைக்கும்படி இயக்குநரிடம் கூறியுள்ளார் விஷால். வேறு யாரும் இப்படிச் சொல்வார்களா என்று தெரியவில்லை. அது விஷாலால் மட்டுமே முடியும்.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை இப்போது பார்க்கும்போது எங்களுக்கே பிரமிப்பாக இருக்கிறது. மீண்டும் இப்படியொரு காட்சியில் இருவரும் நடிப்போமா என்று தெரியவில்லை. உண்மையில் நாம்தாம் பண்ணினோமா என்று பேசிக் கொண்டிருந்தோம். அது படமாக்கப்பட்டபோது இருவருக்குமே நிறைய அடிபட்டது. நானும், விஷாலும் மீண்டும் ஒரு அற்புதமான படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வினோத்துக்கு நன்றி. இதன் காட்சிகள் முதலில் சிங்கப்பூரில் படமாக்கப்படுவதாக இருந்தது. கரோனா பிரச்சினையால் துபாயில் படமாக்கினோம். அதற்கு 3 மடங்கு அதிக செலவானது. இந்தப் படத்தில் அனைவருமே பிரமாதமாக நடித்துள்ளார்கள். தீபாவளிக்கு வெளியாகும் பெரிய படமாக இது இருக்கும்".

இவ்வாறு ஆர்யா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in