கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு: சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு

கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு: சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு
Updated on
1 min read

கமல் நடித்து வரும் 'விக்ரம்' படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

தற்போது சென்னையில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது 'விக்ரம்' படக்குழு.

அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அரங்குகள் அமைக்கவும், அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

கரோனா விதிமுறைகளைக் காரணம் காட்டியும், அரசாங்கத்துக்குச் சொந்தமான இடங்களில் எந்த நிகழ்வும் நடத்த முடியாது என்ற பாதுகாப்பு காரணங்களையும் சுட்டிக்காட்டியும் மறுப்புத் தெரிவித்துள்ளது சென்னை காவல்துறை.

இது தொடர்பாக 'விக்ரம்' படக்குழுவினருக்கு, சென்னை காவல்துறையினர் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in