

புதுடெல்லி: நாட்டின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தேசிய நடிகராக மலையாள நடிகர் மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன் ஆகியோரும், சிறந்த நடிகையாக யாமி கவுதமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்கள் அள்ளியுள்ளன. சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய சினிமாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த கலை பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய விருதுகள் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் டெல்லியில் நேற்று இந்த விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விருதுகளைத் தேர்வு செய்ய பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட மத்திய நடுவர் குழு அமைக்கப்பட்டு இருந்தது. நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டின் சிறந்த படமாக ‘ஆர்ட்டிக்கிள் 370’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த தேசிய நடிகர் விருதை நடிகர் மம்மூட்டியும், இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனும் இணைந்து பெறுகின்றனர். பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டிக்கும், சந்து சாம்பியன் படத்தில் நடித்ததற்காக நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்படவுள்ளது. ஆர்ட்டிக்கிள் 370 இந்திப் படத்தில் நடித்ததற்காக நடிகை யாமி கவுதமுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டுக்கான விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்தப் படம் சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த எடிட்டிங் பிரிவுகளில் விருதுகளை வென்றது.
ராஜ்குமார் பெரியசாமி
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இயக்கிய, அமரன் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வென்றுள்ளார். சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், சிறந்த எடிட்டிங் பிரிவில் ஆர்.கலைவாணனுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
கேப்டன் மில்லர் படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கேப்டன் மில்லர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான (சிறப்புப் பிரிவு) தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்கான படமாக ‘கேப்டன் மில்லர்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயன் படம்
அதேபோல் தமிழில் சிறந்த படமாக நடிகர் தனுஷ், நடிகை துஷாரா விஜயன் நடித்த ராயன் படத்துக்குக் கிடைத்துள்ளது.
மெய்யழகன்
நடிகர்கள் அரவிந்த்சாமி, கார்த்தி நடித்த திரைப்படமான ‘மெய்யழகன்’ (சிறப்புப் பிரிவு) படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான (சவுண்ட் மிக்ஸ் டிசைன்) விருது சுரேன். ஜிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஜா படத்துக்கு 2 விருது
நடிகர்கள் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மகாராஜா படத்துக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த துணை நடிகை பிரிவில் சச்சனா நமிதாஸும், சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான பிரிவில் அனல் அரசுவும் இந்த விருதைப் பெறவுள்ளனர்.
அதேபோல் புளூ என்ற தமிழ்ப் படத்துக்கு (நான் ஃபீச்சர் பிரிவு) சிறந்த ஒலி வடிவமைப்புக்கான (பெஸ்ட் சவுண்ட் டிசைன்) விருதை ஹரிஹர சுதன் பெறவுள்ளார்.
மம்மூட்டிக்கு 4-வது தேசிய விருது
பிரம்மயுகம் படத்துக்காக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் மம்மூட்டி 4-வது முறையாக தேசிய விருதைப் பெறுகிறார். இதற்கு முன்பு 1989-ல் வெளிவந்த ஒரு வடக்கன் வீரகதா, மதிலுகள் படத்துக்காக முதல் முறையும், 1994-ல் வெளிவந்த பொந்தன் மாடா, விதேயன் படங்களுக்காக 2-வது முறையும், 1999-ல் வெளிவந்த டாக்டர் அம்பேத்கர் படத்துக்காக 3-வது முறையும் தேசிய விருதை மம்மூட்டி பெற்றுள்ளார்.