'ராஜவம்சம்', 'தள்ளிப் போகாதே' வெளியீடு ஒத்திவைப்பு: பின்னணி என்ன?

'ராஜவம்சம்', 'தள்ளிப் போகாதே' வெளியீடு ஒத்திவைப்பு: பின்னணி என்ன?
Updated on
1 min read

'ராஜவம்சம்', 'தள்ளிப் போகாதே' ஆகிய படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினங்களைக் கணக்கில் கொண்டு 'அரண்மனை 3', 'ராஜவம்சம்', 'தள்ளிப் போகாதே' ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. ஆனால், இப்போது 'அரண்மனை 3' மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜவம்சம்', அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'தள்ளிப் போகாதே' ஆகிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துள்ளன. புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளார்கள்.

இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது, திரையரங்குகள் குறைவாகக் கிடைத்ததுதான் காரணம் என்றார்கள். குறிப்பாக 'டாக்டர்' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படம் இரண்டாவது வாரத்தில் கூட சுமார் 50% திரையரங்குகளில் திரையிட்டு வருகிறார்கள்.

பின்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் 'அரண்மனை 3' படம் இதர திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரண்டு படங்கள் போக, ஹாலிவுட் படமான 'வெனம்' வெளியாகிறது. அதற்கும் சில திரையரங்குகள் கிடைக்கும். இவை மூன்றையும் தாண்டி 'ராஜவம்சம்', 'தள்ளிப் போகாதே' ஆகிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை.

ஆகையால், இரண்டு படங்களுமே தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைத்துவிட்டன. இவை இரண்டுமே பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in