மல்டிப்ளக்ஸ் கோரிக்கையை நிராகரித்த 'தலைவி' தயாரிப்பாளர்

மல்டிப்ளக்ஸ் கோரிக்கையை நிராகரித்த 'தலைவி' தயாரிப்பாளர்
Updated on
1 min read

மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை 'தலைவி' தயாரிப்பாளர் நிராகரித்துவிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'தலைவி'. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திட்டம் குறித்து சர்ச்சை நிலவியது. இதனால் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடுவது என்ற முடிவை எடுத்தது 'தலைவி' படக்குழு. இதனைத் தொடர்ந்து இந்தியைத் தவிர்த்து இதர மொழி வெளியீட்டுச் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

ஆனால், இந்தியிலும் 'தலைவி' படத்தை 4 வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும் என்று மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதனை 'தலைவி' தயாரிப்பாளர் நிராகரித்துவிட்டார்.

'தலைவி' வெளியீடு தொடர்பாக அளித்த பேட்டியில், "பெரிய பொருட்செலவில் 'தலைவி' படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தியிலும் 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியீடு என்ற முடிவை எடுத்தால், பெரும் பண இழப்பு ஏற்படும். எங்களால் அடுத்த படத்தைத் தயாரிக்க இயலாது. முன்பு மாதிரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது இருக்காது என்பது அனைவருக்குமே தெரியும். இந்தியில் சிறு திரையரங்குகள் பெரியளவில் 'தலைவி' வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார் 'தலைவி' தயாரிப்பாளர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in