'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி, ஜெயம் ரவியின் கதாபாத்திரம்: ட்வீட் மூலம் வெளியான ரகசியம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி இருவரும் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து தனது காட்சிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் ஜெயம் ரவி. இதனை முன்னிட்டு நெகிழ்ச்சியுடன் சில ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவுகளை மேற்கோளிட்டு கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இளவரசே ஜெயம் ரவி, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்குச் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன்".

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், கார்த்தியின் இந்தப் பதிவைக் குறிப்பிட்டு ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வந்தியத்தேவரே… உங்கள் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டுத் தென் மண்டலம் வாருங்கள். சோழ நாட்டின் புலிக்கொடி எங்கும் பறக்க இணைந்தே பணியாற்றுவோம். - அருண்மொழிவர்மன்".

இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி மற்றும் கார்த்தியின் இந்தப் பதிவுகளின் மூலம் இருவரும் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in