என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்: ஜெயம் ரவி நெகிழ்ச்சி

என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்: ஜெயம் ரவி நெகிழ்ச்சி
Updated on
1 min read

என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு முடிந்தது தொடர்பாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதில் நடித்து வரும் நடிகர்களும், இந்தப் படத்தின் கெட்டப்பில் இருந்ததால் வேறு எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்கள். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் ஜெயம் ரவி.

இது தொடர்பாக ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தலைமைப் பண்பும், கற்றலும் ஒன்றோடொன்று இன்றியமையாதவை. இந்த பிரம்மாண்டப் படைப்பை இவ்வளவு துல்லியத்தோடு நீங்கள் முன்னெடுத்து, அதே நேரத்தில் சுற்றியிருப்பவர்களுக்கும் கற்றுக் கொடுத்ததைப் பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

உங்கள் ஆசீர்வாதங்கள், உங்கள் நகைச்சுவையுணர்வு, உங்கள் அக்கறை காட்டும் இயல்பு, இவை எல்லாவற்றையும் தாண்டி என் மீது வைத்த நம்பிக்கை என எல்லாவற்றுக்கும் நன்றி. உங்களோடு படப்பிடிப்புத் தளத்தில் மீண்டும் இருக்க முடியவில்லையே என்று கண்டிப்பாக வருந்துவேன். மீண்டும் உங்களோடு பணிபுரியும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

பொன்னியின் செல்வன், ஒன்றல்ல இரண்டு பாகங்கள் முடிந்துவிட்டன. கனத்த இதயத்தோடு அடுத்த புது முயற்சிகளுக்குச் செல்கிறேன். இன்று என் அம்மாவின் விசேஷமான ஆசீர்வாதங்களுடன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா"

இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in