Published : 02 Aug 2021 03:04 PM
Last Updated : 02 Aug 2021 03:04 PM

பிரபல பாடகி கல்யாணி மேனன் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

சென்னை

பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் காலமானார். அவருக்கு வயது 80.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன். தமிழில் 1979-ம் ஆண்டு வெளியான 'நல்லதொரு குடும்பம்' படத்தில் 'செவ்வானமே பொன் மேகமே' என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் மறக்க முடியாத பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். 'புதிய மன்னர்கள்' படத்தில் 'வாடி சாத்துக்குடி', 'காதலன்' படத்தில் 'இந்திரையோ இவள் சுந்தரியோ', 'முத்து' படத்தின் 'குலுவாலிலே', 'அலைபாயுதே' படத்தில் 'அலைபாயுதே', 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 'ஓமணப் பெண்ணே' உள்ளிட்ட பல பாடல்கள் கல்யாணி மேனன் பாடியவை தான்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் பிரச்சினையால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

இன்று (ஆகஸ்ட் 2) மதியம் சிகிச்சைப் பலனின்றி கல்யாணி மேனன் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு ராஜீவ் மேனன் மற்றும் கருணாகரன் மேனன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராஜீவ் மேனன் முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக வலம் வருகிறார்.

கல்யாணி மேனனின் இறுதிச் சடங்கு நாளை (ஆகஸ்ட் 3) சென்னையில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x