3 நாட்களுக்கு முன்பே ட்விட்டர் கணக்கு முடக்கம்: குஷ்பு

3 நாட்களுக்கு முன்பே ட்விட்டர் கணக்கு முடக்கம்: குஷ்பு
Updated on
1 min read

3 நாட்களுக்கு முன்பே தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாக குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் குஷ்பு. கடந்த சில தினங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில், எந்தவொரு ட்வீட்டும் இடவில்லை. இதனிடையே, இன்று (ஜூலை 20) காலை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளது தெரியவந்தது.

அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, ட்வீட்கள் அத்தனையும் நீக்கப்பட்டது. மேலும், பெயரையும் BRIANN என்று மாற்றப்பட்டுள்ளது. இது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று மதியம் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவுள்ளார் குஷ்பு.

மேலும், தனது ட்விட்டர் கணக்கு முடக்கம் தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மூன்று நாட்களுக்கு முன்பு என்னுடைய ட்விட்டர் ஐடி ஹேக் செய்யப்பட்டு விட்டது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். கடந்த சில நாட்களால் என்னுடைய ட்விட்டர் கணக்கில் பதியப்படும் பதிவுகள் என்னுடையது அல்ல”

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in