

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார். கரோனா ஊரடங்கு சமயத்தில் மிஷ்கின் எழுதியுள்ள கதைக்கு அதர்வா பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
மிஷ்கின் - அதர்வா கூட்டணி முதன்முதலாக இந்தப் படத்தில்தான் இணைந்து பணிபுரியவுள்ளது. தயாரிப்பு நிறுவனம் முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.