Published : 06 Jun 2021 05:38 PM
Last Updated : 06 Jun 2021 05:38 PM

திரையுலகில் பெண்கள் மீது பாரபட்சம் இருக்கிறதா? - தமன்னா பதில்

சென்னை

திரையுலகில் பெண்கள் மீது பாரபட்சம் இருக்கிறதா என்ற கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தெலுங்கில் 'சீட்டிமார்', 'மாஸ்ட்ரோ', 'எஃப் 3', 'தேட் இஸ் மகாலட்சுமி' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் இறுதியாக விஷாலுடன் 'ஆக்‌ஷன்' படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு 'நவம்பர் ஸ்டோரி' என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். தமிழில் நடிப்பதற்காக பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கேட்டுள்ளார்.

இதனிடையே, தனது படங்கள், நடிப்பு முறை, வெப் சீரிஸ் உள்ளிட்டவை குறித்து தமன்னா பேட்டியளித்துள்ளார். அதில் "சினிமாவில் பெண்கள் மீதான பாரபட்சம் என்பது நீண்ட நாட்களாக இருக்கிறதா? நடுவில் சுராஜ் கூறிய கருத்துக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருந்த சம்பவம் நடந்தது. அந்த ஒரு தருணம் தான் நீங்கள் சந்தித்ததா?” என்ற கேள்விக்கு தமன்னா அளித்துள்ள பதில் பின்வருமாறு:

"பெண்கள் மீதான வெறுப்பு / பாரபட்சம் எல்லா இடங்களிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. திரைத்துறையில் நடக்கும் போது ஊடகங்களில் வெளிவருகிறது, மக்களுக்குத் தெரிகிறது. இன்று பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொண்டாடப்படுகிறது.

அன்று, இயக்குநர் சுராஜ் தான் பேசுவதின் தீவிரம் தெரியாமல் பேசிவிட்டார் என்று நினைக்கிறேன். அதை மிகவும் இயல்பாகப் பேசிவிட்டார். தான் சொன்னதன் முழு அர்த்தத்தை அவர் உணரவில்லை. நான் அவருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம். அதாவது அவர் பேசுவது தவறு என்றே தெரியாத அளவுக்கு அது போன்ற விஷயங்கள் சகஜமாகிவிட்டன. அந்தத் தருணத்தில் அது என்னை மிகவும் பயமுறுத்தியது ஏனென்றால் நான் அவர் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

இன்று, அது போலப் பேசியவர்கள் பலரின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட பிறகு மக்களுக்குக் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இப்படிப் பேசினால் பொதுவில் அவப்பெயர் வரும் என்கிற பயம் வந்திருக்கிறது. அன்று இந்த பயம் இல்லை. எனவே இன்றைய மாற்றம் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது"

இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x