Published : 25 May 2021 12:38 PM
Last Updated : 25 May 2021 12:38 PM

’கைதி 2’ உருவாகும்: தயாரிப்பாளர் உறுதி

'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் மேக்கிங், ஒளிப்பதிவு, கார்த்தியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு என அனைத்துக்குமே பாராட்டு கிடைத்தது. மேலும், இந்தியில் 'கைதி' ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் 'கைதி 2' உருவாவது குறித்து பேச்சு எழுந்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்தியும் 'கைதி 2' கண்டிப்பாக உருவாகும் என்று உறுதிப்படுத்தினார். முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2-ம் பாகம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டார். ஆனால், அதற்குப் பிறகு 'கைதி 2' குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.

இதனிடையே, ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் பக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் 'கைதி 2' குறித்த கேள்விக்கு எஸ்.ஆர்.பிரபு, "கார்த்தி சார், லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்" என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் 'கைதி 2' படம் இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x