'அடங்காதே' இயக்குநரின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

'அடங்காதே' இயக்குநரின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
Updated on
1 min read

'அடங்காதே' படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கவுள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு, மந்த்ரா பேடி, சுரபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடங்காதே'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து தணிக்கை ஆகியுள்ளது. அதிலும் தணிக்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, மறுதணிக்கையில் பல்வேறு கட்களுடன் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்து திரையரங்குகள் திறக்கப்படவுடன் 'அடங்காதே' படம் வெளியாகவுள்ளது. தற்போது தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார் சண்முகம் முத்துசுவாமி. நாயகியைப் பிரதானமாகக் கொண்ட இந்தக் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'க/பெ ரணசிங்கம்' படத்துக்கு வசனம் எழுதியவர் சண்முகம் முத்துசுவாமி. அந்தப் படத்தில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

அந்த நட்பின் அடிப்படையில் சண்முகம் முத்துசுவாமியின் கதையைக் கேட்டவர், மிகவும் பிடித்துவிடவே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in