

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
'வணக்கம்டா மாப்ள', 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே', 'ஜெயில்', '4ஜி', 'காதலிக்க யாருமில்லை', 'பேச்சிலர்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவைத் தவிர்த்து இசையமைப்பாளராகவும் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
கரோனா ஊரடங்கிற்கு பின், பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தின் இயக்குநர், நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். இதனை அறிமுக இயக்குநர் கெளசிக் ராமலிங்கம் இயக்கி வருகிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷ் உடன் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நாயகி மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடவில்லை. ரூபி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக ஷரவான் சரவணன் மற்றும் எடிட்டராக ஜிஜேந்திரன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.