‘ஏராளமான உணர்வுகள் அடங்கிய படம்’- ‘தீனி’ குறித்து நித்யா மேனன் பகிர்வு

‘ஏராளமான உணர்வுகள் அடங்கிய படம்’- ‘தீனி’ குறித்து நித்யா மேனன் பகிர்வு
Updated on
1 min read

தான் நடித்துள்ள ‘தீனி’ படம் குறித்த அனுபவங்களை நடிகை நித்யா மேனன் பகிர்ந்துள்ளார்.

'ஓ மை கடவுளே' படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் புதிய படமொன்று தொடங்கப்பட்டது. பிரபல இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாசர், நித்யா மேனன், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் தயாராகி வந்தது.

தெலுங்கில் 'நின்னிலா நின்னிலா' எனவும், தமிழில் 'தீனி' என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இணையத்தில் 'தீனி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

ஒளிப்பதிவாளராக திவாகர் மணி, இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், பாடலாசிரியராக ஸ்ரீமணி, எடிட்டராக நிவின் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வரும் 26ஆம் தேதி நேரடியாக ‘ஜீப்ளெக்ஸ்’ தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை நித்யா மேனன் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

''இப்படத்தில் நண்பர்கள் அனைவரும் இணைந்துள்ளோம். இது ‘அலா மொதலைந்தி’ பட நாட்களை எனக்கு நினைவூட்டுகிறது. அப்படம் உருவானபோது நானி, இயக்குநர் நந்தினி ரெட்டி, நான் மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். படமும் சூப்பர்ஹிட் ஆனது. அதே போல ‘தீனி’ படத்திலும் நடக்கும் என்று நம்புகிறேன்.

இப்படம் நான் இதற்கு முன் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஏராளமான உணர்வுகள் அடங்கியுள்ளன. படப்பிடிப்பின்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களைப் போல இருந்தோம். இப்படம் பார்ப்பவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்''.

இவ்வாறு நித்யா மேனன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in