சிக்கல்களுக்குத் தீர்வு: விரைவில் வெளியாகும் நரகாசூரன்

சிக்கல்களுக்குத் தீர்வு: விரைவில் வெளியாகும் நரகாசூரன்

Published on

அனைத்து பைனான்ஸ் சிக்கல்களும் பேசி தீர்க்கப்பட்டதால், விரைவில் 'நரகாசூரன்' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. ஹாலிவுட் படத்தை முடித்துவிட்டு தனுஷ் இந்தியா திரும்பியவுடன், அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில், 'துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் 'நரகாசூரன்' படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்தச் சமயத்தில் இந்தப் படத்தின் மீதிருந்த அனைத்து பைனான்ஸ் சிக்கல்களும் பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. தற்போது மார்ச் 5-ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 'நரகாசூரன்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

'நரகாசூரன்' வெளியீடு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in