Published : 15 Feb 2021 08:55 PM
Last Updated : 15 Feb 2021 08:55 PM

படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இல்லை: 'பேச்சிலர்' இயக்குநர்

சென்னை

'பேச்சிலர்' படத்தில் எந்தவிதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை என்று இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேச்சிலர்'. காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். முனீஷ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

'பேச்சிலர்' படம் தொடர்பாக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியிருப்பதாவது:

"கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படம். இளம்பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண்மகன் என ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் இருவிதமான தோற்றங்களில் நடித்துள்ளார்.

'பேச்சிலர்' டீஸர் இளைஞர்களுக்கான படமாகத் தோற்றம் தரலாம். ஆனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாக இது இருக்கும். இதில் எந்தவிதமான சர்ச்சைக்குரிய விஷயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும்".

இவ்வாறு இயக்குநர் சதீஷ் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், எடிட்டராக ஷான் லோகேஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் திரையரங்குகளில் 'பேச்சிலர்' வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x