

உயர் நீதிமன்றத்தில் தடை நீங்கியிருப்பதால், வரும் 9-ம் தேதி ‘கத்துக்குட்டி’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
அறிமுக இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் நரேன், சூரி, ஸ்ருஷ்டி டாங்கே நடித்த ‘கத்துக்குட்டி’ திரைப்படம் கடந்த 1-ம் தேதி ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அன்வர் கபீர் படத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ராம்குமார் தனக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் தர வேண்டும் என்றும் அந்த தொகையை செலுத்திய பிறகே ‘கத்துக்குட்டி’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்துக்கு இரண்டு வாரம் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 58 லட்சத்துக்கான காசோலையை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ராம்குமார் அளித்ததால், படத்துக்கான தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் அக்டோபர் 9-ல் ‘கத்துக்குட்டி’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.