

'மாஸ்டர்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாவதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கை முடிந்து படத்தின் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் 'மாஸ்டர்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 14-ம் தேதி இந்தி டப்பிங்கான 'விஜய் தி மாஸ்டர்' வெளியாகும் எனவும் உறுதி செய்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து வெளியாகவுள்ள பெரிய நடிகரின் படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியிடாமல் காத்திருந்து திரையரங்க வெளியீட்டில் உறுதியாக இருந்ததினாலும், பெரும் முதலீடு கொண்ட படம் என்பதாலும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எனப் பலரும் மாஸ்டர் குழுவின் முடிவைப் பாராட்டிவரும் வேளையில் நடிகர் தனுஷும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
"விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது. திரைப்படப் பிரியர்களுக்கு இது மிகச் சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்க ஆரம்பித்தால் திரையரங்க கலாச்சாரம் என்பது மீண்டும் செழிக்கும். திரையரங்க அனுபவம் போல எதுவும் கிடையாது. தேவையான அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு படத்தைத் திரையரங்கில் பாருங்கள்" என்று தனுஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.