Published : 24 Dec 2020 11:47 AM
Last Updated : 24 Dec 2020 11:47 AM

'காட்டேரி' வெளியீடு திடீர் தள்ளிவைப்பு: பின்னணி என்ன?

சென்னை

'காட்டேரி' படத்தின் வெளியீட்டை திடீரென்று தள்ளிவைத்துள்ளது படக்குழு. அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

'யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி’. ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் இருந்தது. ஆனால், திடீரென்று ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி திரையரங்க வெளியீட்டுக்கு மாறியது. கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

இதற்காக தமிழகமெங்கும் சுமார் 300 திரையரங்குகள் வரை ஒப்பந்தம் செய்து, படத்தினை தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வந்தார்கள். திடீரென்று நேற்றிரவு (டிசம்பர் 23) 'காட்டேரி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

பின்னணி என்ன?

'காட்டேரி' வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"கரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத்தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ம் தேதி வெளிவர இருக்கும் 'காட்டேரி' திரைப்பட வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த கரோனா தாக்கம் குறைந்தவுடன் 'காட்டேரி' திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்"

இவ்வாறு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x