வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி: சாய் பல்லவி

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி: சாய் பல்லவி
Updated on
1 min read

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகவுள்ள ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் ஒவ்வொரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாகப்பட்ட கதைகளாகும்.

இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஓர் இரவு'. பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

"நான் எடுத்ததிலேயே மிகவும் வன்முறையான படம் இது என்று வெற்றிமாறன் கூறினார். ஒரு பெண்ணுக்கு இப்படி நடக்கிறது என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவருக்கும் அதே அளவு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எனக்கு சுமதி என்கிற கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. என் உடலிலேயே அது தாக்கத்தை ஏற்படுத்தியது. முடியும் வரை குமட்டிக் கொண்டே இருந்தது.

இதற்கு வெற்றிமாறன் படப்பிடிப்பில் உருவாக்கிய சூழல் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படப்பிடிப்புக்கு நடுவில் அவர் வந்து என்ன நடக்கிறது என்பதை எங்களிடம் சொல்வார். என்னிடம் எனது கதாபாத்திரத்தைப் பற்றி, பிரகாஷ்ராஜிடம் அவரது கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுவார். இது எல்லாம் சேர்ந்து மனதில் ஓடியது என்று நினைக்கிறேன்".

இவ்வாறு சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in