அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு ’டாக்டர்’

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு ’டாக்டர்’
Updated on
1 min read

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு 'டாக்டர்' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

'ஹீரோ' படத்துக்குப் பிறகு 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.

சென்னை, ஹைதராபாத் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தெலுங்கில் 'கேங் லீடர்' படத்தில் நடித்த ப்ரியங்கா அருள் மோகன் இதில் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது, கரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் 'டாக்டர்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்தப் படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. தற்போது, தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2021 கோடை விடுமுறை வெளியீடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்துவிட்டு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. 'டாக்டர்' படத்தை முடித்துவிட்டு, ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in