

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘சக்ரா’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இன்னும் 7 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டியுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. இதற்குக் காரணம் ஓடிடியில் படத்தை வெளியிடத் திட்டமிடுகிறார்கள் என்று தகவல் வெளியானது. இந்தத் தகவல் வெளியான உடனேயே படக்குழு மறுப்பு தெரிவித்தது.
ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், படங்கள் எப்போது வெளியாகும் என்ற தெரியாத நிலையில் தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் 'சக்ரா' வெளியாகும் என்று விஷால் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதியளித்துள்ள நிலையில் இன்று (05.10.20) ‘சக்ரா’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக ஒரு காணெலியையும் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.