

படப்பிடிப்புத் தளங்களே தனக்கு மிகவும் நிம்மதியான இடங்களாக இருப்பதாக கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தலைவி'. இந்தப் படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
க்ளைமாக்ஸ் காட்சியும், பாடலும் படமாக்கப்பட வேண்டியிருந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையில், 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கங்கணா தென்னிந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவி’ படப்பிடிப்புத் தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள கங்கணா கூறியிருப்பதாவது:
“காலை வணக்கம் நண்பர்களே, அன்பான மற்றும் மிகவும் திறமையான இயக்குநரான ஏ.எல்.விஜய்யுடன் திரைப்படம் குறித்து உரையாடியபோது எடுத்த சில படங்கள் இவை. உலகில் எத்தனையோ அற்புதமான இடங்கள் இருக்கலாம். ஆனால், படப்பிடிப்புத் தளங்களே எனக்கு மிகவும் நிம்மதியான, இனிமையான இடங்களாக இருக்கின்றன.”
இவ்வாறு கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.