Published : 05 Oct 2020 07:28 AM
Last Updated : 05 Oct 2020 07:28 AM

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக நடிகை சனம் ஷெட்டியின் புகாரில் நடிகர் தர்ஷன் மீது போலீஸார் வழக்கு பதிவு

சென்னை

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரில் நடிகர் தர்ஷன் மீது போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை சனம் ஷெட்டி. ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்துவருகிறார். இவருடன் படப்பிடிப்பு களின் போது நடிகர் தர்ஷன் நெருக்கமாகியுள்ளார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட தர்ஷன் தமிழகத்தில் பலமாடலிங் படங்களில் நடித்தார். பின்னர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதால் பிரபலமானார்.

இந்நிலையில், அவர் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் மாதம் திருமணமும் நடக்க முடிவு செய்திருந்த நிலையில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கியதால் நிகழ்ச்சி முடிந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

மேலும் நமக்கு நிச்சயம் நடந்தது பற்றி வெளியில் கூறினால் பெண்கள் ரசிக்க மாட்டார்கள் என தர்ஷன் கூறினார். தர்ஷன் வெளிநாட்டில் ஷூட்டிங் செல்வதற்கு ரூ.15 லட்சம் வரை செலவழித்தேன். நிகழ்ச்சி முடிந்த பின்பு என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். அவரது பெற்றோரும் அதற்கு உடந்தை. எனவே, என்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின்பேரில், நடிகர் தர்ஷன் மீது அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x