விஜய் சேதுபதி கதையில் நாயகனாக விமல் ஒப்பந்தம்

விஜய் சேதுபதி கதையில் நாயகனாக விமல் ஒப்பந்தம்
Updated on
1 min read

விஜய் சேதுபதி எழுதியுள்ள கதையில் நாயகனாக நடிக்க விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு 100 பேருடன் படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்திருப்பதால், பல்வேறு படப்பிடிப்புகள் திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது விமல் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது.

'குலசாமி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை சரவண சக்தி இயக்கவுள்ளார். முழுக்க ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார். விமலுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சற்குணம் இயக்கத்தில் 'எங்க பாட்டன் சொத்து', மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்காரி', முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கன்னிராசி' ஆகிய படங்கள் விமல் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

கரோனா அச்சுறுத்தலால் விமல் நாயகனாக நடித்து வந்த 'படவா', ‘புரோக்கர்’, 'மஞ்சள் குடை', 'லக்கி' மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in