

'காஷ்மோரா' படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று வெளியாகி இருக்கும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'காஷ்மோரா'. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' கோகுல் இயக்கி வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு படக்குழு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறது.
அதில், "அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக 'காஷ்மோரா' குழுவினர் மும்மரமாக வேலை செய்து வருகின்றனர். இந்தப் படத்தை நல்ல தரத்தில் எடுக்க அதிக நேரமும், செலவும், உழைப்பும், தொழில்நுட்ப உதவியும், பொறுமையும் தேவைப்படுகின்றது. படப்பிடிப்பு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டும். சரிபார்க்காமல் அவசரப்பட்டு தவறாக செய்தி வெளியிடும் அனைத்து ஊடகங்களும், இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். உண்மையான தகவல்கள் தெரிவிக்கப்படும்” என்று அந்த விளக்கத்தில் படக்குழு தெரிவித்திருக்கிறது.
கார்த்தி நடிப்பில் இதுவரை வெளியான படங்களை விட அதிக பொருட்செலவில் உருவாகும் படம் 'காஷ்மோரா' என்பது குறிப்பிடத்தக்கது.