

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பகிரப்பட்டுள்ளது.
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இரங்கல்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய என்று தேடியந்திரத்தில் தேடினால் அதன் கீழ் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என எஸ்பிபி பாடிய பன்மொழிப் பாடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு, கூகுள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி பகிரப்பட்டுள்ளது.
இதனுடன், 40,000 பாடல்கள், 15 மொழிகள், ஒரு குரல், இது இசையைத் தனது மொழியாக்கிய சகாப்தத்துக்கு எங்கள் அஞ்சலி, என்றும் உங்கள் பாடல்கள் எங்களுடன் அன்போடு பேசும். ஆன்மா சாந்தியடையட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
கூகுளின் இந்த அஞ்சலிக்குப் பல பயனர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.