சிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயனுடன் இணையும் தேசிங் பெரியசாமி?
Updated on
1 min read

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வயகாம் 18 நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். இதனால் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிவகார்த்திகேயனை மனதில் வைத்தே கதையொன்றை எழுதி வருகிறார் தேசிங் பெரியசாமி. முழுமையாக இந்தக் கதையை முடித்து, அது சிவகார்த்திகேயனுக்கு பிடித்தால் இந்தக் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவருடைய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in